717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
தமிழகத்தின் குடும்பங்களின் நலனுக்காக இத்தகைய நல்ல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மதுவினால் சீரழியும் குடும்பங்களைக் காக்க 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகக் குடும்பங்களின் அமைதி மற்றும் நலனுக்காக இத்தகைய மக்கள் நலச் சார்ந்த நடவடிக்கைகள் வரும் காலங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த 717 கடைகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவரான தமிழிசை இதனைப் பாராட்டியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?
மது அருந்துவோர் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே தங்களது அரசின் இலக்கு என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!