'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பணம் பறித்தனர்'! பாஜ மாநில செயலாளர் ராம. சீனிவாசன் பரபரப்பு புகார்!
இந்த சம்பவத்தில் பூமாறன் கூறிய விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ராம. சீனிவாசன் கருதியதாக கூறப்படுகிறது. திட்டமிட்டு நாடகமாடி பணத்தை அபகரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
மதுரையில் பா.ஜ. மாநில செயலாளர் ராம. சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலின்போது மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட்ட ராம. சீனிவாசன், அப்போது திருப்பாலை பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு நேரமும் ஈடுபட்டிருந்ததால், கட்டுமான பணிக்கான செலவாக ரூ.50 லட்சத்தை பொறியாளரிடம் ஒப்படைக்கும்படி தனது நண்பரான புதூரைச் சேர்ந்த பூமாறனிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணத்தை பெற்றுச் சென்ற சில மணி நேரங்களிலேயே பூமாறன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, போலீஸ் சீருடையில் வந்த சிலர் தன்னை தாக்கி, ரூ.50 லட்சத்தையும் பறித்துச் சென்றதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்
சில நாட்கள் கழித்து, தனியார் மருத்துவமனையில் பூமாறன் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த ராம. சீனிவாசன் அவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, பணத்தை பறித்த கும்பல் தன்னை காரில் கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும், மறுநாள் அதிகாலையில் வேறு இடத்தில் காரிலிருந்து தள்ளிவிட்டதால் காயமடைந்ததாகவும் பூமாறன் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் பூமாறன் கூறிய விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ராம. சீனிவாசன் கருதியதாக கூறப்படுகிறது. திட்டமிட்டு நாடகமாடி பணத்தை அபகரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பூமாறன் மீது ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வழக்கின் உண்மை நிலையை கண்டறிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் இறுதியில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!