சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!
சென்னை விமான நிலையப் பகுதியில் போயிங் விமானம் ஒன்று தாழ்வாகவும், வட்டமடித்தும் பறந்ததால் ஏதேனும் ஆபத்தா என பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அது முறையான அனுமதி பெற்ற பயிற்சி விமானம் எனத் தெரியவந்தது.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரிய ரக போயிங் விமானம் ஒன்று தொடர்ந்து வானில் வட்டமடித்துப் பறந்ததால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானம் அவ்வப்போது தரையிறங்குவது போல் மிகத் தாழ்வாக வந்துவிட்டு, மீண்டும் திடீரென உயரத்தில் பறந்து வட்டமடித்தது.
விமான நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அந்த விமானத்திற்கு ஏதேனும் ஆபத்தா என்று கருதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். வழக்கமாகச் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ரன்வே பராமரிப்புப் பணிகளின் போது விமானங்கள் வானில் காத்திருப்பது வழக்கம். ஆனால், இன்று புதன்கிழமை என்பதால் இத்தகையச் செயலால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொலம்பியாவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம் - 15 பேர் பலி!
இதுகுறித்துச் செய்தியாளர்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், "இது ஒரு தனியார் பயிற்சி விமானம். இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றிடம் முறையான அனுமதி பெற்றே இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பெரிய ரக போயிங் விமானங்களைத் தரையிறக்குவது குறித்துப் பயிற்சி விமானிகளுக்குத் தகுந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து குறைவாக உள்ள நேரத்தைத் தேர்ந்தெடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்தனர். அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பிறகு அப்பகுதியில் நிலவியப் பரபரப்பு ஓய்ந்து சகஜ நிலை திரும்பியது.
இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் மரணம்..!! வெளியான பகீர் சிசிடிவி..!! 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!