1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷம்!
இந்தியாவில் கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் குறிப்பிடத்தக்க அரிய வகை கனிம வளங்களை மத்திய கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களில் 'டெடிகேட்டட் ரேர் எர்த் காரிடார்கள்' (Dedicated Rare Earth Corridors) அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அரிய வகை கனிம வளங்களை (Rare Earth Elements) சுரங்கம், பதப்படுத்துதல், ஆராய்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் மிக முக்கிய திட்டமாகும்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கடற்கரை மணல் (beach sand) மற்றும் கடின பாறைகளில் பெருமளவு அரிய கனிம வளங்கள் உள்ளதை அணு கனிம ஆய்வு இயக்குநரகம் (AMD) கண்டறிந்துள்ளது.
குறிப்பாக மோனசைட் (Monazite) என்ற அரிய கனிமம் முக்கியமானது. இது யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களுடன் தொடர்புடையது. எனவே இது கடும் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?
எட்டு மாநிலங்களில் (தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட், மேற்கு வங்கம்) கடற்கரை, செம்மண், வண்டல் மண்ணில் 1,315 கோடி கிலோ மோனசைட் வளம் உள்ளது. இதில் 723 கோடி கிலோ அரிய மண் ஆக்சைடு (Rare Earth Oxides) உள்ளது. கூடுதலாக ராஜஸ்தான், குஜராத்தில் கடின பாறைகளில் 129 கோடி கிலோ அரிய ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா உலக அளவில் அரிய கனிம வளங்களில் முதல் நான்கு நாடுகளில் ஒன்று. ஆனால் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவற்றை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார். சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க இந்த திட்டம் உதவும்.
பட்ஜெட்டில் மோனசைடுக்கு சுங்க வரி 2.5%லிருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரேர் எர்த் பெர்மனென்ட் மேக்னெட் உற்பத்தி திட்டம் (நவம்பர் 2025-ல் தொடங்கியது) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது EV வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளுக்கு மிக முக்கியம்.
தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு இது பெரும் வாய்ப்பு. கடற்கரை பகுதிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சுயசார்பு இந்தியாவுக்கு (ஆத்மநிர்பர் பாரத்) இது முக்கிய படி.
இந்த அறிவிப்பு தமிழகம் உட்பட கடற்கரை மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிய கனிமங்கள் எதிர்கால தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்தியா இப்போது அதை பலமாக்குகிறது.
இதையும் படிங்க: வெளியானது Economic Survey!! பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!! GDP-யில் காத்திருக்கும் மேஜிக்!