அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!
அனைத்து கட்சிகளும் தன்னை அழைத்த போதிலும், நல்லவர் பக்கம் இருக்க வேண்டும் என்பதாலேயே விஜய்யைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதியில் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்தது குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அவர் ஆற்றிய உரை அனல் பறப்பதாக இருந்தது.
தன்னை அனைத்துக் கட்சிகளும் அழைத்ததாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன் அரசியலில் இத்தனை ஆண்டுகள் பயணித்த என்னைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டினர். ஆனால், நான் ஒரு நல்லவர் பக்கத்தில் (விஜய்) இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தமிழக மக்களின் நலனுக்காகவும், நேர்மையான அரசியலுக்காகவும் களம் இறங்கியுள்ள விஜய்யின் தலைமை எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் தயக்கமின்றி தவெக-வில் இணைந்தேன் எனத் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிந்தைய அதிமுக-வின் நிலை குறித்து அவர் ஆவேசமாகப் பேசினார்: 'லேடியா.. மோடியா..' என்று கர்ஜித்தவர் மறைந்த தலைவி ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுக-வில் நடந்த அட்டூழியங்களைத் தாங்க முடியவில்லை. கடந்த எட்டு ஆண்டுகள் எனக்கு மிகுந்த மனவேதனையையும் துயரத்தையும் தந்த காலமாகும். கட்சியின் கொள்கைகள் சிதைக்கப்பட்டு, தனிமனித நலனே மேலோங்கி நின்றது. அங்கு நிம்மதி இல்லாத சூழலில்தான் மக்களுக்கான மாற்றத்தைத் தேடி வெளியே வந்தேன்" என்றார்.
இதையும் படிங்க: கொள்கை இருந்தாலே வெல்ல முடியும்! சீமானின் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!
விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார் தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தைத் தரக்கூடிய தகுதி தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமே உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று சாதனை படைக்கும். மக்கள் தங்களுக்குப் பிடித்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் புரட்சியை 2026 தீர்ப்பு வழங்கும்" என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
நாளை மாலை பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தேர்தல் களத்தில் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நான் கண்ட கனவை செயல்படுத்துகிறார் அன்பில் மகேஸ்! திருவெறும்பூரில் கமல்ஹாசன் புகழாரம்!