×
 

கர்நாடகாவுக்கு தனியாக போகாதீர்கள்! முதலமைச்சர் விஜய்க்கு பொன் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தனியாகச் செல்லக் கூடாது என முதல்வர் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசுடன் காவிரி நீர் விவகாரத் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் தனியாகச் செல்லக்கூடாது என்றும், காவிரி உரிமை கிடைக்காவிட்டால் நீங்கள் தமிழ்நாட்டை ஆள அருகதையற்றவர்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், காவிரி நீர் பங்கீடு மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில முறைகேடு விவகாரங்கள் குறித்துப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கர்நாடக அரசுடன் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமிழக முதல்வர் விஜய் தனியாகப் போகக்கூடாது. பேச்சுவார்த்தைக்குத் தனியாகச் செல்வதற்கு இது ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல; மாறாக எட்டு கோடி தமிழர்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சனையாகும். காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுத்துத் தமிழகத்திற்கு உரிய நீரைக் கொண்டுவரத் தவறினால், நீங்கள் தமிழ்நாட்டை ஆளவே அருகதையற்றவர்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

தொடர்ந்து பழனி கோயில் நில ஆவண முறைகேடு வழக்கு குறித்துப் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்குத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசுமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆன்மீகச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது எனக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார். முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share