இண்டிகோ சேவை பாதிப்பு: இறுதி விளக்க அறிக்கையை தர மறுப்பு! - மத்திய துணை செயலாளர் குற்றச்சாட்டு!
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இறுதி விளக்க அறிக்கையைத் தரவில்லை என்று மத்திய விமான போக்குவரத்து துறை துணை செயலாளர் அம்புஜ் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
அம்புஜ் சர்மாகடந்த ஒன்பது நாட்களாகத் இந்தியா முழுவதும் தொடரும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்திய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதம் குறித்த விவகாரத்தில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் அம்புஜ் சர்மா இன்று சென்னை விமான நிலையத்தில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டார். விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர், விமானப் பயணிகள், விமான நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை மற்றும் விமான ஆணையக அதிகாரிகளுடன் அவர் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அம்புஜ் சர்மா, விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் நடந்துள்ள ஓட்டைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
"இண்டிகோ ஏர்லைன்ஸ் விவகாரம் கடந்த ஒன்பது நாட்களாக நீடித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள், விமான சேவைகள் ரத்தானது மற்றும் பயணிகளின் உடமைகளைத் திரும்பப் பெறுதல் போன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்," என்று அவர் விளக்கம் அளித்தார். விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 5ஆம் தேதிதான் விமான சேவைகளில் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது; அன்றைய தினம் 186 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர் தகவலைப் பதிவு செய்தார். தற்போது சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்றும், அது படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்றும் தெரிவித்த துணைச் செயலாளர், இயல்புநிலை திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் 24 மணி நேரமும் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். இணையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், கூடுதல் திறனை ஈடுசெய்ய முடியுமா என்று பிற விமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் கூடுதல் தகவலை அளித்தார். 1060 பயணிகளின் உடமைகள் திரும்ப வழங்கப்பட்டு விட்டன என்றும், முழுமையான விவரங்கள் இல்லாததால் வழங்கப்படாமல் இருக்கும் 18 பயணிகளின் உடமைகள் உரியவர்களிடம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: இண்டிகோ விமான போக்குவரத்து சேவை சீரானது: CEO பீட்டர் எல்பர்ஸ் வீடியோ வெளியீடு!
முக்கியத் தகவலாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளபோதிலும், இறுதி விளக்க அறிக்கையை அந்நிறுவனம் இன்னமும் தரவில்லை என்று அம்புஜ் சர்மா குற்றம் சாட்டினார். மேலும், இந்தியா முழுவதும் சுமார் ₹1,500 கோடிக்கு மேல் பணத்தைத் திரும்ப இண்டிகோ நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இண்டிகோ நிறுவனம் தங்கள் விமான அட்டவணையை 10 சதவீதம் குறைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். விமானப் போக்குவரத்துத் துறை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ஆனால் நிறுவனங்கள் தொடங்க முன்வந்தால் அரசு உதவத் தயாராக உள்ளது என்றும், விதிமுறைகள் அனைத்தும் விமான நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்துதான் உருவாக்கப்படும் என்றும் அவர் முடிவுரை அளித்தார்.
முன்னதாகப் பேசிய விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர், டிசம்பர் 1ஆம் தேதி வெறும் 4 விமானங்கள் மட்டுமே ரத்து ஆனதாகவும், 173 விமான சேவைகள் தாமதமானதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததாகவும் தெரிவித்தார். 5ஆம் தேதி தான் அதிக அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிக அளவில் கூடி விட்டனர் என்றும், எனினும் டெல்லி செல்லக்கூடிய பயணிகள் ஏர்-இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
ரத்துகள் குறைந்த பிறகு, டிசம்பர் 6ஆம் தேதி முதல் விமானப் பயணிகள் அதிகரித்து வருவதாகவும் அவர் புள்ளிவிவரத்தை வெளியிட்டார். டிசம்பர் 1ஆம் தேதி 67,000 ஆக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 5ஆம் தேதி 36,000 ஆகக் குறைந்திருந்த நிலையில், தற்போது 9ஆம் தேதி 53,000 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். விமானச் சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன என்றும், முனையங்களை மேம்படுத்திப் பயணிகள் வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் ராஜா கிஷோர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: போலாம் ரைட்..!! மீண்டும் தொடங்கிய இண்டிகோ விமான சேவை..!! பயணிகள் சற்று நிம்மதி..!!