×
 

மதுரை ஏர்போர்ட்டிற்கு கிடைச்சாச்சு சர்வதேச அந்தஸ்து..!! வெளியானது அறிவிப்பாணை..!! தென் தமிழகத்துக்கு பெரும் வரப்பிரசாதம்..!!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டெல்லியில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திலும் மொத்தம் ஐந்து முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கான தீர்மானம் இடம்பெற்றிருந்தது.

நீண்டகாலமாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவை எழுப்பி வந்த கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையும் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் தமிழ்நாட்டின் மிகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். கோயில் நகரமாக விளங்கும் மதுரையின் முக்கிய நுழைவாயிலாக இது திகழ்கிறது.

தென் தமிழகத்தின் சுற்றுலா, புனித யாத்திரை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது மையப் பங்காற்றுகிறது. இப்போது சர்வதேச அந்தஸ்து பெறுவதால், பிராந்திய இணைப்பு வலுப்படும்; வர்த்தகம் பெருகும்; பொருளாதார வளர்ச்சி துரிதப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “மதுரை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவது மக்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் முடிவு.

இதையும் படிங்க: அமெரிக்காவின் இருப்பை ஒழிப்போம்! டெல்லியில் அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

இது தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை மேம்படுத்தும். பல்வேறு விமான நிறுவனங்கள் துபாய், அபுதாபி, கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி சேவைகளை விரிவுபடுத்த ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் பல பகுதிகளுடன் இணைப்பு உருவாகும். சுங்கச் சேவைகள், தனிமைப்படுத்தல் வசதிகள், சுகாதார அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தும் தானாக மேம்படுத்தப்படும்” என்று விளக்கினார்.

இந்த மாற்றத்தால் மீனாட்சி அம்மன் கோயில், கூடல் அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில், ராமேசுவரம் போன்ற புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு வெளிநாட்டு பக்தர்கள் எளிதில் வருகை தர இணைப்பு வலுப்படும். மேலும், ஆட்டோமொபைல், ரப்பர், ரசாயனம், கிரானைட் உள்ளிட்ட தொழில்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மதுரையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளும் பலம் பெறும்.

தற்போது மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வாரத்துக்கு 242க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சர்வதேச அந்தஸ்து கிடைத்ததால், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தென் தமிழக மக்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share