கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!
இந்தியாவிலேயே பொது இடத்தில் அமைக்கப்பட்ட முதல் மாதிரி இதுதான் என கோவையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பெருமிதம்.
விண்வெளி ஆய்வில் இந்தியா படைத்த வரலாற்றுச் சாதனையை இளைய தலைமுறைக்கும், பொதுமக்களுக்கும் பறைசாற்றும் வகையில், கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'சந்திரயான் மற்றும் ரோவர்' மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும், சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சிறப்பான நிகழ்வு அரங்கேறியது.
நான் இதே காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்துதான் ஒரு காலத்தில் கனவுகளுடன் பெங்களூருவுக்குப் பயணம் செய்தேன். இன்று அதே இடத்தில் நான் பணியாற்றிய சந்திரயான் திட்டத்தின் மாதிரியைத் திறந்து வைப்பதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். கல்வி நிறுவனங்கள் அல்லது இஸ்ரோ வளாகங்களைத் தாண்டி, பொதுமக்களின் பார்வைக்காக ஒரு பொது இடத்தில் சந்திரயான் மாதிரி அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாதிரிச் சிலைகள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் அறிவியலில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டும். கோவையிலிருந்து சந்திரயானுக்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பப்பட்டது நமக்கெல்லாம் பெருமை. விண்வெளித் துறையில் கோவை மாவட்டத்தின் பங்களிப்பை இது மென்மேலும் உயர்த்தும். மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆய்வில் அடுத்தகட்ட மையமாக மாறப்போகிறது. சிறு உபகரணங்கள் முதல் ராக்கெட்டுகள் வரை அங்கேயே தயாரித்து ஏவும் நிலையை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம்.
இதையும் படிங்க: 2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘STEM Lab’ எனப்படும் புத்தாக்க நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் இவற்றில் விண்வெளித் துறையை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாதிரியில் ஏன் தமிழ் எழுத்துக்கள் இடம்பெறவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சந்திரயான் விண்கலம் எப்படி இருந்ததோ, அதே போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு இருப்பதாக அவர் விளக்கமளித்தார். கோவையின் அடையாளமாக மாறியுள்ள இந்தச் சந்திரயான் மாதிரி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!