ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!
மத்தியக் கிழக்கில் போர் நடைபெற்று வருவதால் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவைகள் முடக்கபட்டுள்ளதால் வெளிநாட்டுப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்தியப் பதில் தாக்குதலையும் அடுத்து, மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது வான்வழிப் பகுதிகளை மூடியுள்ளதால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (பிப்ரவரி 28) மாலை முதல் இன்று (மார்ச் 1) மதியம் வரை சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், தோஹா மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று அதிகாலையில் இருந்து மட்டும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்கள் வழக்கமாக ஈரான் வான்வழியைப் பயன்படுத்தும். தற்போது அந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் விமானங்கள் சென்னை வந்து சேருவதிலும், இங்கிருந்து புறப்படுவதிலும் பல மணி நேரத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!
விமான ரத்து காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானப் பயணிகள் சிக்கியுள்ளனர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தப் பயணி ஒருவர் கூறுகையில், பல மணி நேரமாகத் தான் விமான நிலையத்தில் தவிப்பதாகவும், மாற்று ஏற்பாடுகள் குறித்துத் தெளிவானத் தகவல் இல்லை எனவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் நடத்தியப் பதிலடியில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஏவுதளங்கள் மற்றும் துபாய், அபுதாபி போன்ற நகரங்களுக்கு அருகிலும் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்துள்ளதால், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், "விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உங்களது பயணத்தின் தற்போதைய நிலையை உறுதி செய்து கொள்ளுங்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!