×
 

ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னையில் மனித முடி ஏற்றுமதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை (FEMA) விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த மனித முடி (Human Hair) ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னை தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செனகல் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், வங்கி நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக மறைத்து எடுத்து வந்த சுமார் 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களுடன் அதிகாரிகளால் அண்மையில் இடைமறிக்கப்பட்டார். மும்பை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அவர், தன்னிடம் இருந்த வெளிநாட்டுப் பணத்தைச் சுங்கத்துறையிடம் முறைப்படி அறிவிக்கவில்லை. மும்பையிலிருந்து சென்னை வந்த அவரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அந்த வெளிநாட்டுப் பணத்திற்கான முறையான ஆவணங்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களோ அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட வெளிநாட்டுப் பயணி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மனித முடிகளைச் சேகரித்து, பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த 'மெசர்ஸ் நந்தலாலா எண்டர்பிரைசஸ்' (M/s. Nandalala Enterprises) மற்றும் 'மெசர்ஸ் ராம் ஹேர் இம்பெக்ஸ்' (M/s. Ram Hair Impex) ஆகிய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவதற்காக, ஃபெமா சட்டங்களை மீறி அவர் இந்த வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 15 அன்று அந்நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான 3 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்தச் சோதனையின் போது, ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயை ஃபெமா சட்டங்களை மீறி வெளிநாட்டுப் பணமாகப் பெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க, துபாயைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும், ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான உரையாடல்களும் கண்டறியப்பட்டன. முதற்கட்ட மதிப்பீட்டின்படி, ஃபெமா சட்டங்களை மீறி சுமார் 50 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி சேகரிக்கப்பட்டதற்கான பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, கணக்கில் வராத 5.39 லட்சம் இந்திய ரூபாய், 16,823 அமெரிக்க டாலர், 1,860 யூரோ ஆகியவற்றுடன் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share