கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!
பணியாளர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியாத அளவிற்கு, சென்னை மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.
சென்னை மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மோசமடைந்துள்ளதால், பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பல புதிய வளர்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாலை மேம்பாடு, பள்ளி கட்டடங்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இந்தப் பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்காக ஆண்டுதோறும் வட்டியாக மட்டும் ரூ.95 கோடிக்கும் மேல் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ஆண்டுக்கு ரூ.2,437 கோடிக்கும் அதிகமாகவும், பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் செலவிடப்படுவதால் மாநகராட்சியின் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தலைமை செயலகமா? தவெக அலுவலகமா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி!
மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எதிர்பார்த்த அளவில் நிதி கிடைக்காததும் தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக, வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட ரூ.800 கோடிக்கும் அதிக மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நிலையை சமாளிக்க, சொத்து வரி வசூலை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. நிலுவை வைத்துள்ள சொத்து வரியை வீடு வீடாகச் சென்று வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கூடுதல் நேரத்தில் வரி வசூல் நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் ரூ.300 கோடி வரை சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிதி நெருக்கடி சீராக குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவரை, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, சாலை விபத்துகளைத் தடுக்கும் பணிகள், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் முக்கிய திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், நிதிநிலை சீரான பிறகு ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டு புதிய திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தயங்காம உங்க பிரச்னைகளை சொல்லுங்க! நான் முதல்வர்கிட்ட பேசுறேன்! கவர்னர் அர்லேக்கர் அழைப்பு!!