5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, இதனை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை மேலும் ஒத்திவைத்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று (ஆகஸ்ட் 24) முடிவடையும் நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூரைத் தேர்ந்தெடுத்து திருச்சி கிழக்கில் இருந்து ராஜினாமா செய்தார். அதேபோல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்தச் சூழலில், தேர்தல் வழக்குகள் முடிவடையும் முன் இடைத்தேர்தல் நடத்தினால் பொது நிதி வீணாகும் என்றும், ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசனச் சிக்கல் எழும் என்றும் சுட்டிக்காட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி பொதுநல மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, இதனை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது.
இதையும் படிங்க: நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!
இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபைச் செயலாளர், முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்குப் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.ஜூலை 31 அன்று விசாரணைக்கு வந்தபோது தடை ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றதில், தடை செப்டம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த சில எம்.எல்.ஏ.க்கள் தடையை நீக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அனைத்துத் தரப்பினரும் பதில் மனுக்கள் தாக்கல் செய்தால் அடுத்த விசாரணையில் முதன்மை வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தயாராக உள்ளது. அரசியல் சாசனப்படி, தொகுதி காலியானால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை முடிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகள் இந்தத் தடைக்கு உட்படவில்லை. அரசியல் கட்சிகளின் கவனம் இப்போது இந்த இடைத்தேர்தல் விவகாரத்திலேயே குவிந்துள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!