×
 

சென்னையில் 300 ஏசி மினி பஸ்கள் வாங்கும் டெண்டர் திடீர் ரத்து!! போக்குவரத்து திட்டத்தில் புதிய குழப்பம்?

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வாங்கவிருந்த 300 'ஏசி' மினி பஸ்களுக்கான டெண்டர், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 300 ஏசி மின்சார மினி பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கான காரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது 650-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3,400 பேருந்துகளை இயக்கி வருகிறது. தினமும் 34 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையங்களை இணைக்கும் வகையில் மினி பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தனியார் பங்களிப்புடன் 300 ஏசி மின்சார மினி பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே அது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

இதற்கு முன்பும் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு மொத்தம் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. புதிய பேருந்துகளை வாங்கினால் போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்ற காரணத்தால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 300 ஏசி மினி பேருந்துகளுக்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து முக்கிய வழித்தடங்களுக்கு 220 மினி பேருந்துகளை வாங்குவதற்கான தனி டெண்டர் தொடர்கிறது என்றும், அது ரத்து செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக ஆயிரம் புதிய மின்சார பேருந்துகளை வாங்கும் மற்றொரு பெரிய டெண்டர் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. அதுவும் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பது தற்போது போக்குவரத்து துறையில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share