சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!
திருவொற்றியூரில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த 16 வயது மாணவர் தனுஷ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் இளைய மகனான தனுஷ், பள்ளி முடிந்ததும் வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை நான்கு முப்பது மணியளவில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியில் நிலவும் சிறு சிறு கசப்புகள் எவ்வளவு பெரிய வன்முறையாக மாறும் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.சம்பவம் நடந்தது அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில். தனுஷ் பள்ளி முடிந்து வீடு செல்ல பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றபோது, பிளஸ் ஒன் படிக்கும் ஒரு மாணவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து அவரைச் சுற்றி வளைத்தனர்.
அவர்கள் தனுஷை அந்த காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். தாக்குதலில் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட தனுஷ் சுயநினைவிழந்து கீழே விழுந்தார். தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்பகுதி மக்கள் மயங்கிக் கிடந்த மாணவரைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதலுக்குப் பின்னால் சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சிறு வாக்குவாதம் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கோவை மாணவனுக்கு நடந்தது என்ன?... முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்..!
பள்ளியில் பிளஸ் டூ மாணவருக்கும், தற்போது பிளஸ் ஒன் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் யார் சீனியர் என்ற விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தனுஷ் தனது நண்பருக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. வேறொரு தகவலின்படி, தனுஷ் தனது நண்பருடன் அந்த மைதானத்திற்குச் சென்றபோது பிளஸ் ஒன் மாணவர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தார். அவர் தனுஷின் நண்பரின் முகத்தில் புகையை ஊதியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தனுஷ் இருவரையும் பிரித்துவிட்டுச் சென்றார். அடுத்த நாள் பள்ளி முடிந்ததும் அந்த பிளஸ் ஒன் மாணவர் தனது நண்பர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட பத்து முதல் முப்பது பேர் வரை உள்ள கும்பலுடன் வந்து தனுஷைத் தேடினார். நண்பர் எங்கே என்று கேட்டு, அவர் பள்ளிக்கு வரவில்லை என்று பதில் கிடைத்ததும் தனுஷையே தாக்கினர். தாக்குதலின்போது கழுத்துப் பகுதியில் காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது. மாணவன் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!