சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?
சென்னையில் நாளை 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளையும் வழங்குகிறது. பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, சிறு-குறு வணிக கடன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்கள் தங்கள் வீட்டருகே பெற முடியும்.
முதல் கட்டமாக, 10,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களை விளக்கி, தேவையான ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 45 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!
இத்திட்டம், டிஜிட்டல் அறிவு அல்லது இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நான்காம் கட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (05.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43ல் கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள சமூகநலக் கூடம், இராயபுரம் மண்டலம், வார்டு-63ல் செல்லப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எம்.எஸ்.மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-66ல் காமராஜர் திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-116ல் திருவல்லிக்கேணி, டி.பி.கோவில் முதல் தெருவில் உள்ள பாரதியார் இல்லம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-162ல் தில்லை கங்கா நகர், உள்வட்டச் சாலை 45வது தெருவில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு மண்டலம், வார்டு-170, ஆசிரியர் காலனி, லேக்வியூ சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஷ்வர பெருமாள் திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: நீரை சேமிச்சு வெச்சுக்கோங்க மக்களே..!! சென்னையில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!