×
 

பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொன்று, துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த விவகாரத்தில், கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா சென்றடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், தலை மற்றும் சில உடல் பாகங்கள் இல்லாமல் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று சூட்கேஸில் அடைக்கப்பட்டுக் கிடந்தது. சடலம் இருந்த அந்த சூட்கேஸில் கிடைத்த துணிக்கடை ஒன்றின் பிளாஸ்டிக் பைதான் போலீசாரின் சந்தேகத்தை சென்னையை நோக்கித் திருப்பியது.

அதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் 3ஆம் தேதி ஓர் ஆணும் பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வருவது பதிவாகி இருந்தது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே இருவரும் இறங்கி சென்னை பூங்கா ரயில் நிலையம் நோக்கிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறிய அந்த இருவரும், இறுதியில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. அங்கிருந்து ஆட்டோவில் அவர்கள் தப்பிச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த இளைஞர் கொலை? - பகீர் பின்னணி...!

இதைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த மர்ம ஜோடி தங்கி இருந்தது தெரியவந்தது.

வீடு பூட்டியிருந்த நிலையில், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வீடு முழுவதும் ரத்தக்கறைகள் இருந்ததாகவும், உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது. மேலும், அவற்றை பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்திருந்ததற்கான தடயங்களும் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் லஸ்கர், பகவதி மாஜி ஆகியோர் அங்கு தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களுடன் 45 வயதான ஐதுல் நிஷா என்ற பெண்ணும் தங்கி இருந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கணவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்த ஐதுல் நிஷாவுக்கும், தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாணிக் லஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் மூவரும் கூடுவாஞ்சேரியில் ஒரே வீட்டில் தங்கி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அந்த தம்பதிக்கும் ஐதுல் நிஷாவுக்கும் ஏற்பட்ட தகராறில்தான் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த இடம் கூடுவாஞ்சேரி என்பதால், அங்குள்ள போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்தக் கொலை பணத்திற்காக நடந்ததா, உறவு தொடர்பான பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, உடலின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் செல்போன் எண்களையும் கண்டுபிடித்துள்ள போலீசார், செல்போன் டவர் சிக்னலை வைத்து தற்போது ஒடிசா விரைந்துள்ளனர். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share