நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!
கடைக்கோடி பகுதியில் இருந்தும் நாட்டின் எந்த ஒரு வழக்கையும் இணையத்தில் காணும் வகையில் ONE CASE ONE DATA எனும் திட்டம் இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய நீதித்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தரவுகளையும் ஒரே தளத்தில் இணைக்கும் "ONE CASE ONE DATA" எனும் புதிய திட்டத்தை இந்தியத் தலைமை நீதிபதி முனைவர் சூரியகாந்த் இன்று அறிமுகப்படுத்தினார்.
இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த டிஜிட்டல் மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தித் தலைமை நீதிபதி பேசியதாவது இனி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் என அனைத்து மட்டத்திலான நீதிமன்றங்களின் வலைதளங்களும் தனித்தனியாகச் செயல்படாமல், இந்த ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் இருந்துகொண்டே நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு தாலுகா நீதிமன்றத்தின் வழக்கு நிலவரங்களைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அதேபோல், கீழ்நிலை நீதிமன்றப் பணியாளர்களும் நாடு முழுவதும் உள்ள வழக்கு விவரங்களை எளிதாகக் கையாள முடியும். வழக்கு மேலாண்மை (Case Management) மேம்படுவதால், வழக்குகளின் தேக்க நிலை குறையும் மற்றும் நீதி வழங்குவதில் கூடுதல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!
இத்துடன், பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உதவும் வகையில் ‘சு சஹாய்’ (Su Sahay) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட் (Chatbot) சேவையையும் தலைமை நீதிபதி அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நீதிமன்றச் சேவைகளை மக்கள் மிக எளிதாக இணைய வழியில் அணுக முடியும்.
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்று நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்து வரும் அதே வேளையில், தேசிய அளவில் நீதித்துறையிலும் இத்தகைய பிரம்மாண்ட தொழில்நுட்ப மாற்றம் நிகழ்ந்துள்ளது. "நீதிமன்றங்கள் இனி காகிதமில்லா (Paperless) அலுவலகங்களாக மாறுவதற்கு இந்த 'ஒரே வழக்கு ஒரே தரவு' திட்டம் ஒரு வலுவான அஸ்திவாரமாக அமையும்" எனப் சட்ட வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் ஒரு வழக்கின் முழு விவரங்களையும் விரல் நுனியில் பெரும் வசதியை இந்தத் திட்டம் ஏற்படுத்தியுள்ளது, சாதாரண சாமானிய மக்களுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!