திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!
பொதுமக்களுக்கு தூய்மையான காற்றை வழங்குவதையும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி: தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக தலைநகர் சென்னை 35வது இடத்திலும், மதுரை 39வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழக நகரங்களின் காற்றுத் தரம் தொடர்பான தரவரிசை கவனம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ம் தேதி தூய்மையான காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தூய்மையான காற்றை வழங்குவதையும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நகரங்களின் தரவரிசையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் 197 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும், ஜபல்பூர் 195 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: விடிந்ததுமே இப்படியா?... கே.என்.நேரு வீட்டிற்கு ஓடோடி சென்ற அன்பில் மகேஷ்... திருச்சியில் குவியும் திமுகவினர்...!
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் திருச்சி 183 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை 35வது இடத்திலும், மதுரை 39வது இடத்திலும் உள்ளன.
காற்று மாசுபாட்டால் தொடர்ந்து கவனம் பெறும் டெல்லி 21வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஹைதராபாத் 19வது இடத்திலும், மும்பை 28வது இடத்திலும், பெங்களூரு 32வது இடத்திலும், கொல்கத்தா 38வது இடத்திலும் உள்ளன.
இதற்கிடையே, 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் தூத்துக்குடி 35வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் ஒடிசாவின் ரூர்கேலா முதலிடத்தை பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் இரண்டாவது இடத்திலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அமராவதி முறையே 3 மற்றும் 4வது இடங்களிலும் உள்ளன.
தமிழகத்தில் சென்னையை விட திருச்சி சிறந்த தரவரிசையைப் பெற்றிருப்பது, நகரங்களின் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!