×
 

மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய  அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வை அடுத்து, அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 10.05.2026 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் (IMBL) தாண்டியதாகத் தெரிவித்து, அவர்களின் நாட்டுப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர் இன்னல்கள் குறித்து முதல்வர் விஜய் தனது ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துள்ளார்.  இன்றைய கைதுடன் சேர்த்து, ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடி வருகின்றனர். வாழ்வாதாரமான சுமார் 264 மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

எல்லைத் தாண்டியதாகத் தெரிவிக்கப்படும் இந்தக் கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உரிய தூதரக முறைகளைப் பயன்படுத்திச் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் உள்ளவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய  அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், மீனவர் நலன் காப்பதில் தனது அரசு காட்டும் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக முதலமைச்சரின் இந்தக் கடிதம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share