×
 

முதலமைச்சர் விஜய்யின் அடுத்த டெல்லி பயணத்தில் ராகுல் காந்தியுடன் சந்திப்பு இருக்கும்! பிரவீன் சக்கரவர்த்தி உறுதி!

டெல்லி பயணத்தில் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் ஏன் சந்திக்கவில்லை என எழுந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி சென்னை விமான நிலையத்தில் விளக்கமளித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று மதியம் மீண்டும் சென்னை வந்தடைந்தார். டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உடனடியாக வழங்கக் கோரி முதலமைச்சர் விஜய் மனுக்களை அளித்திருந்தார்.

இந்த இரண்டு நாள் பயணத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்காமல் சென்னை திரும்பியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் சலசலப்பையும் கிளப்பியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அகில இந்திய வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.


டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் விஜய், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களைச் சந்திக்கவில்லை என்று எங்கள் தரப்பில் இருந்து எந்தவொரு குற்றச்சாட்டும் எழவில்லை. இது யார் கிளப்பிவிட்ட வதந்தி என்றும் எங்களுக்குத் தெரியவில்லை என்று பிரவீன் சக்கரவர்த்தி முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், முதல்வர் விஜய் டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்திப்பார் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

சந்திப்பு நடக்காததற்கான பின்னணியை விளக்கிய அவர், டெல்லி சென்றிருந்த முதலமைச்சருக்குப் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மட்டுமே முக்கியச் சந்திப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன. மேலும், நேற்று மாலை 6 மணிக்கு மேல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மற்ற அவசரப் பணிகள் இருந்ததால் நேரமில்லை. இதன் காரணமாகவே அவர்களால் பரஸ்பரம் இம்முறை சந்திக்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் தனது அடுத்த டெல்லி பயணத்தின் போது, நிச்சயம் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனைகளை நடத்துவார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவிற்கே ராகுல் காந்தி நேரில் வருகை தந்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்தச் சந்திப்பு நடக்காததில் இருதரப்பிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share