×
 

70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பெருமளவில் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய திருத்தங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று மிக முக்கியமான அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கடந்த ஜூன் 24 அன்று வெளியிட்ட தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவு 2026 காரணமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் மற்றும் உள்கட்டமைப்புச் சிக்கல்களை முதலமைச்சர் விஜய் அவர்கள் இக்கடிதத்தின் மூலம் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். தற்போதைய நடைமுறையின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் மாதந்தோறும் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் புதிய திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு மாதத்திற்கு 7 கிலோ மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் திடீர் ரேஷன் கொள்கை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர விபரங்களை அடுக்கிக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், நபர் ஒருவருக்கு 7 கிலோ என்று கணக்கிட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் அரிசியின் அளவு பாதியாகக் குறைந்துவிடும். இது, மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிக்கும் செயலாக அமைந்துவிடும் என்று முதலமைச்சர் விஜய் மிகத் துணிச்சலாகத் தனது கடிதத்தில் வாதிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - ஜப்பான் உச்சிமாநாடு: 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்தார் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி!

தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள சுமார் 69,26,983 ஏழைப் பயனாளிகள் உணவிற்கான தார்மீகப் பாதுகாப்பைப் பெற்று வருகின்றனர். தற்போதைய திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் 65,261 மெட்ரிக் டன் உணவு தானிய ஒதுக்கீடு, வெறும் 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும். அதாவது, சுமார் 23,000 மெட்ரிக் டன் அரிசி ஏழை மக்களின் தட்டிலிருந்து பறிக்கப்படும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்கள் அரிசியையே முதன்மை உணவாகக் கொண்டுள்ள சூழலில், வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து அரிசி வாங்க நேரிட்டால் அது ஏழைகளைப் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிடிக்குள் தள்ளிவிடும் என்று கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பழைய நடைமுறைப்படியே 35 கிலோ வழங்கும் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சுமார் எழுபது இலட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்ற முதலமைச்சரின் இந்த அதிரடிக் கடிதம், டெல்லி மற்றும் கோட்டை வட்டாரங்கள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களின் டிஜிட்டல் பக்கங்களிலும் தற்போது மாபெரும் விவாத அலைகளைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share