7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. மதிமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தோழமை கட்சிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், எதிர்கால அரசியல் திட்டங்களை வகுக்கவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு கொடுத்த வாக்குறுதியின் படியே ஆட்சி, அதிகாரத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கு அளித்து வருகிறது.
இதையும் படிங்க: ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!
காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணியுடன் பிற கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது புதிய கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி அமைச்சர் வன்னியரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், எம்எல்ஏ சையது பாரூக், எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!