×
 

தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும்; இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி, கல்வி, காவிரி, மீனவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசின் கொள்கையை இன்றைய தமிழ்நாடு சட்டபேரவையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். அது என்னவென விரிவாக பார்க்கலாம். 

உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்தான் உள்ளது என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையையும் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில், நடைபெற்று வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நிறைவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர், தமிழ்நாடு அரசு சமூகநீதி ஆய்வை மேற்கொள்ளும்.

1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, மும்மொழிக் கொள்கையை நீக்கி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட இந்த இருமொழிக் கொள்கையை அரசு தொடர்ந்து பின்பற்றும்.

இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அனுமதிக்கவும், உச்சநீதிமன்றத்தின் கிளை அமர்வை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசை அரசு வலியுறுத்தும்.  தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு உறுதியாக எதிர்க்கும். தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,548 கோடி நிதி விடுவிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தமிழ்நாட்டின் மீது மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியாகும். எனவே, நிதி ஒதுக்கீட்டையும் மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தையும் இணைக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.

நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகள் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதன் விளைவாக உருவாகியுள்ளன. எனவே, கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.

கல்வி நிறுவனங்களின் தரத்தையும் கற்பித்தல் திறனையும் மேம்படுத்துவதில்தான் உண்மையான கல்விச் சீர்திருத்தம் உள்ளது. இதற்காக மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வெளிப்படையாக நிரப்பப்படும். மேலும், உயர்கல்வித் துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத் தரத்திலான கல்வியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இப்பகுதி விவசாயிகள் காவிரி நீரையே பிரதான ஆதாரமாக நம்பியுள்ளனர். காலங்காலமாக தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பயன்படுத்தும் உரிமை உள்ளது. இந்த உரிமையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் உரிய நீரைப் பெற தமிழ்நாடு போராட வேண்டிய நிலை தொடர்கிறது.

கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்குரிய பங்கீட்டு நீரை வழங்காமல் உபரி நீரை மட்டுமே திறந்து விடுகிறது. இதற்கிடையில், மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், டெல்டா மாவட்டங்களில் விவசாய உற்பத்தியும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை தடுக்கவும், தமிழ்நாட்டிற்கு உரிய நேரத்தில் காவிரி நீரைப் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை பாதிக்கும் பல்வேறு சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். பருவமழை, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் தாக்கத்துடன், பாக் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அபராதங்கள் விதிக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும், தமிழ்நாட்டின் வனப்பரப்பு மற்றும் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், சதுப்புநிலக் காடுகள், ஈரநிலங்கள், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உயிரியல் அமைப்புகளையும் பாதுகாக்கவும் அரசு உறுதியுடன் செயல்படும்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைநீரை சேமிக்கவும், ஏரிகள் மற்றும் குளங்களை பராமரிக்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். மேலும், மழைநீர் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்கவும், நீரை சேமிக்கவும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய நீராதாரமாகும். 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியதுடன், அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தவும் பரிந்துரைத்தது.

ஆனால், கேரள அரசு அணை பலப்படுத்தும் பணிகளுக்கு அனுமதி வழங்காமல், புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தேவையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

தமிழ்நாட்டிற்குள் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தையும், தென் மாநில ஆறுகளை இணைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், பூம்புகார் உள்ளிட்ட தொல்லியல் தளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், கீழடி மற்றும் ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்ன அங்கீகாரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளி மாணவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில், தமிழர் நாகரிகத்தின் பெருமையை விரிவாக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality) மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் முழுமையான நிலையான சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவுக்கான உலகளாவிய இலக்காக தமிழ்நாட்டை மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனக்குறிப்பிட்டுள்ளார். 
 

இதையும் படிங்க: மக்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம் தருமா ?- சி.எம்.விஜயை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share