நாளை முதல் களத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை..!! பிரம்மாண்ட தொடக்கம்..!!
நாளை (மே 29ம் தேதி) ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, தமிழகத்தை நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக உருவாக்கும் உயரிய இலக்குடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியுள்ளது. கடந்த மே 10ம் தேதி அன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அன்று மாலை சென்னை கோட்டையில் தனது அறையில் அமர்ந்தவுடன் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட 'சிங்கப்பெண்' திட்டமாகும்.
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த அதிரடிப்படைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி சிறப்பு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு விவகாரங்கள் உயர்மட்டத்தில் கவனம் பெறும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் படை, பெண்கள் தனியாக நடமாடும் போது ஏற்படும் அச்சத்தைப் போக்கும் நோக்கத்துடன் செயல்படும்.
முதல் கட்டமாக ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர். பிற காவலர்களிடமிருந்து தனித்து தெரியும் வகையில் பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் கேமராக்கள் (Body-worn cameras), அதிநவீன வாகனங்கள் ஆகியவை இப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்..!! சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு..!!
அவசர உதவி எண் 100-க்கு வரும் பெண்கள் தொடர்பான புகார்கள் உடனடியாக ‘சிங்கப் பெண்’ படைக்கு மாற்றப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்னல் வேகத்தில் உதவி கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். பெண்களுக்கு எதிரான தொல்லைகள், பாலியல் அச்சுறுத்தல்கள், ஈவ் டீசிங் உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
“பெண்களைத் தொடும் எவரும் தப்பிக்க முடியாது” எனும் வலுவான செய்தியை முன்வைக்கும் இந்தத் திட்டம், தமிழகப் பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தைரியமாக வெளியில் நடமாடும் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தப் படையின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீடு பாதுகாப்பு! சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!