×
 

ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஒரே மாதத்தில் முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்துவிட்டதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகப் புதிய தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, கும்மிடிப்பூண்டியில் 3 வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், "மக்கள் தன்னை நம்பி வாக்களித்ததற்குப் பிரதிபலனாக, இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் முதலமைச்சர் விஜய் மௌனமாகவே உள்ளார். ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே அவரின் சாயம் வெளுத்துவிட்டது என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு இதுவரையில் காணாத வகையில் வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. புதிய ஆட்சி அமைந்து 6 மாதங்களுக்கு எவ்விதக் கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்று நாங்கள் முன்னரே கூறியிருந்தோம். ஆனால், அவை சாதனைகளுக்கான அவகாசமே தவிர, தற்பொழுது நடைபெற்று வரும் வேதனைகளைக் கண்டு தாங்க முடியாமல் பேச வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளோடு அமைந்த ஒரு ஆட்சியில், மக்கள் நலனுக்கு ஏறுமாறாக காரியங்கள் நடக்கும்போது அங்குப் புரட்சி வெடிக்கும் என்பதுதான் வரலாறு. பச்சிளம் குழந்தை சித்திரவதை படுகொலைக்கு முதலமைச்சர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனம் காப்பதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எச்சரித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத கேவலங்கள் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று, ஒரே மாதத்திற்குள் மற்றொரு கட்சிக்கு மாறுவது போன்ற குதிரை பேர அரசியலைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டார். மேலும், கட்சித்தாவலுக்குப் பெயர் போன வடமாநிலத்து 'ஆயா ராம், காயா ராம்' என்ற அரசியல் வாக்கியத்தை மேற்கோள் காட்டி அவர் கடுமையாக விமர்சித்தார். 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட திமுக, தமிழக வரலாற்றில் பல அரசியல் புரட்சிகளைச் செய்துள்ளதாகவும், இதுபோன்ற தரங்கெட்ட கட்சித்தாவல் கலாச்சாரத்திற்கு திமுக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

தவெக அரசால் இன்று வெளியிடப்பட்ட முந்தைய திமுக ஆட்சிக்கான நிதி நிலை வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு, அந்த அறிக்கையைத் தற்பொழுதுதான் வெளியிட்டுள்ளார்கள் என்பதால், அதன் விபரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவிக்க முடியும் என்று ஆர்.எஸ்.பாரதி தனது பேட்டியில் சுருக்கமாகப் பதிலளித்தார். புதிய அரசு அமைந்து ஒரு மாதமே நிறைவடைந்துள்ள சூழலில், சட்டம்-ஒழுங்கு மற்றும் கட்சித்தாவல் விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியான திமுக தவெக அரசுக்கு எதிராகத் தனது அரசியல் வியூகங்களை அசுர வேகத்தில் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share