×
 

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

ஹாகா பகுதிகளில் கட்டுமான அனுமதி வழங்குவதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை வலசை பாதை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில் செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகள் தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வு செய்யப்பட்ட 10 ரிசார்ட்டுகளில் 8 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 17 ரிசார்ட்டுகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனைகட்டி பகுதியில் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனத்தை ஒட்டிய பகுதிகளில் உரிய அனுமதிகள் இல்லாமல் ரிசார்ட்டுகள் செயல்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மலையிடப் பாதுகாப்புக் குழுமம் எனப்படும் ஹாகா கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதிகளில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வனப்பகுதியில் ரிசார்ட்டுகள் மற்றும் கட்டுமானங்கள் அதிகரிப்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரிசார்ட்டுகளில் இருந்து வெளியாகும் செயற்கை ஒளி, வாகனங்களின் சத்தம், கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வனச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநிலம் முழுவதும் யானை வலசை பாதைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு, பாலக்காடு கணவாய்க்கு வடக்கே 22 மற்றும் தெற்கே 16 என மொத்தம் 38 யானை வழித்தடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தன.

ஆனைகட்டி பகுதியில் ரிசார்ட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் நியமித்த குழுவும் ஆய்வு மேற்கொண்டது. அதில் 10 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் இரண்டு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. சமீபத்தில் அனுமதி பெற்றதாக கூறப்படும் இரண்டு ரிசார்ட்டுகளின் ஆவணங்களையும் முழுமையாக சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஆனைகட்டி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 17 ரிசார்ட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஹாகா பகுதிகளில் கட்டுமான அனுமதி வழங்குவதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மனிதர்கள்–யானைகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் இயற்கையான வலசை பாதைகளை பாதுகாப்பது முக்கியமானதாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு, ஆனைகட்டி பகுதியில் மேலும் எத்தனை கட்டுமானங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share