×
 

கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்பில் ஊழல்! புதிய முறைகேடு புகார்! பகீர் தகவல்!

கோவை மாநகராட்சி கன்ட்ரோல் ரூம் பராமரிப்புக்கு டெண்டரே விடாமல், ஆண்டுக்கு ரூ. 5.75 கோடி என, மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கி, முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை (Control Room) பராமரிப்பு பணிகளை டெண்டர் விடாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ₹5.75 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் வரி வசூல், திடக்கழிவு மேலாண்மை வாகனங்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தல் மற்றும் பொதுமக்கள் சேவை தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்தில் சுமார் ₹1.5 கோடி மதிப்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதில் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் சேர்த்து சுமார் 80 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறையை பராமரிக்கும் பொறுப்பு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் ₹5.75 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தம் திறந்த டெண்டர் நடைமுறை இன்றி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதாக சில மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு! பக்தர்கள் காணிக்கையில் கை வைத்த ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்!

மேலும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை முழுமையாக வழங்காமல், குறைவான தொகை மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனுடன், ஊழியர்கள் வார விடுமுறை இல்லாமல் பணியாற்ற வற்புறுத்தப்படுவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சில பெண் ஊழியர்கள், அதிகாரி ஒருவர் தகாத முறையில் பேசியதாகவும், அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பணியில் இல்லாதவர்களின் பெயர்களும் ஊழியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ரவி தேஜாவிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, எழுந்துள்ள அனைத்து புகார்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, உண்மை உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share