கடும் தண்டனை உறுதி! கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் போனில் ஆறுதல்!
கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 6 வயது சிறுமி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் இன்று மதியம் தொலைபேசி (Phone) வாயிலாக நேரடியாகத் தொடர்புகொண்டு தனது ஆழமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
கோவையில் மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோரிடம் பேசிய முதலமைச்சர் விஜய், "மகளை இழந்து தவிக்கும் உங்களுடைய துயரத்தில் நானும், எனது புதிய தவெக அரசும் முழுமையாகப் பங்கெடுக்கிறோம். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை, இந்த அரசு உங்களுக்குப் பின்னால் அரணாக நிற்கும்" என்று உருக்கமாகப் பேசி ஆறுதல் படுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய காமக் கொடூரனுக்குத் நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான, சவுக்கடி போன்ற தண்டனையைப் பெற்றுத் தரத் தமிழகக் காவல்துறைக்குத் தான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகப் பெற்றோரிடம் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக, சிறுமியின் உறவினர்கள் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்..!! ஓடும் பஸ்ஸில் கதறிய பெண்..!! டெல்லியில் அரங்கேறிய கொடூரம்..!!
முதலமைச்சரின் அவசர உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தின் மூத்த அமைச்சரான செங்கோட்டையன் இன்று காலை படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் உடனடி நிதியுதவி மற்றும் தார்மீக ஆதரவை அவர் வழங்கினார்.
இதையும் படிங்க: பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!