×
 

இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம், குறிப்பாக ஈரான் தொடர்பான மோதல்கள், இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. சமையல் எண்ணெய், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் பல மூடப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயங்கும் உணவகங்களிலும் விலை உயர்வு பெரும் சுமையாக உள்ளது.

கொளத்தூர் சாலை மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் கூறுகையில், சமீப காலமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் சமையல் எண்ணெய் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) மொத்த விலையில் லிட்டருக்கு ரூ.155-இலிருந்து தற்போது ரூ.170 வரை உயர்ந்துள்ளது.

சில்லறை கடைகளில் இது ரூ.175-ஐ எட்டியுள்ளது. அதேபோல், பாமாயில் மொத்த விலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் லிட்டருக்கு ரூ.110-ஆக இருந்தது தற்போது ரூ.122-ஆக உயர்ந்துள்ளது; சில்லறையில் ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதனால், இரு வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பிற எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு சமையல் செலவை பெரிதும் பாதித்து, வீட்டு பெண்கள் மற்றும் சிறு வியாபாரிகளை கடுமையாக தவிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சில் இடையூறா? பரவும் வதந்தி! மத்திய அரசு விளக்கம்!

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 55-60% வரை இறக்குமதியை நம்பியுள்ளது. இதில் பாமாயில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது – சுமார் 60% இறக்குமதி பாமாயிலாக உள்ளது. இது முக்கியமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருகிறது. அடுத்ததாக சூரியகாந்தி எண்ணெய், இது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. சோயாபீன் எண்ணெய் பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. தற்போதைய ஈரான் மோதல் காரணமாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் போன்ற முக்கிய கடல் பாதைகள் பாதிப்படைந்ததால், கப்பல் காப்பீட்டு செலவு மற்றும் எரிபொருள் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இது எண்ணெய் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் எண்ணெய் டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு சரிவடைவது (தற்போது அமெரிக்க டாலருக்கு சுமார் ரூ.92 வரை) இறக்குமதி செலவை மேலும் உயர்த்தியுள்ளது. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு (மோதலால் $100 வரை சென்றுள்ளது) பயோடீசல் உற்பத்திக்கு எண்ணெய் திருப்பப்படுவதால், உணவு பயன்பாட்டுக்கு கிடைக்கும் அளவு குறைந்து விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதனால், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அரசு இறக்குமதி வரிகளை குறைப்பது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் தேவை என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் அன்றாட செலவு அதிகரிப்பால் பொருளாதார அழுத்தம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. 

இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share