டெங்கு பிடியில் தமிழகம்? கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று!!
பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசு முட்டையிட்டு இறந்தாலும், அந்த முட்டைகளில் வைரஸ் இருக்கும்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 244 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர்களின் இரத்த மாதிரி சோதனையில் 87 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!
டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸால் ஏற்படுகிறது. இது நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த ஏடிஸ் இனப் பெண் கொசு, மற்றவர்களைக் கடிக்கும்போது வைரஸ் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் பகலில், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகம் கடிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசு முட்டையிட்டு இறந்தாலும், அந்த முட்டைகளில் வைரஸ் இருக்கும்.
நன்னீரில் அல்லது வறண்ட நிலையிலும் ஓராண்டு வரை உயிர்வாழும் இந்த முட்டைகள், மழைநீர் சேரும்போது குட்டிக் கொசுக்களாக வெளிவருகின்றன. பெரும்பாலானோருக்கு (நான்கில் மூன்று பேருக்கு) அறிகுறிகள் தென்படுவதில்லை அல்லது லேசான காய்ச்சல், தலைவலி மட்டுமே இருக்கும். இருந்தாலும் பரிசோதனை அவசியம். தீவிரமானால் உயர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, மூட்டு வலி, வாந்தி, தோல் வெடிப்பு போன்றவை தோன்றலாம். பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
தடுக்கும் வழிகள்: வீட்டுக்குள் மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுதல், குளிர்சாதனப் பெட்டி, பூக்கள் வைக்கும் தொட்டி, டயர் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், பகலில் நீண்ட ஆடை அணிதல், கொசுவலை மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்துதல் ஆகியவை முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைகின்றனர்.
இதையும் படிங்க: டெங்கு பரவல் அதிகரிப்பு! பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதில் சல்வார், சுடிதார் அணிய அனுமதி!