துணை ஜனாதிபதியின் திடீர் விலகல் எதிரொலி! தேர்தல் ஆணையத்தின் அதிமுக்கிய அறிவிப்பு..!
துணை குடியரசு தலைவர் தேர்தல் அலுவலராக பிரமோத் சந்திரா மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த ராஜினாமா மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை உடல்நலப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டாலும், மருத்துவ அறிக்கை இல்லாததால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
உண்மையாகவே உடல்நிலை பிரச்சினை தான் காரணமா? அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா செய்தாரா? என்ற கேள்விகள் எழுந்தன. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகலை அடுத்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் தேர்தல் அலுவலராக மாநிலங்களவைச் செயலாளர் பிரமோத் சந்திரா மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை இணைச் செயலாளரான கரிமா, மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் ஆகியோரை உதவி தேர்தல் அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத்தொடர் 2ஆம் நாள் அமர்வு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு...