×
 

பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

மக்களின் உயிருடன் தொடர்புடைய அவசரப் பிரச்சினைகளுக்காக எடப்பாடியார் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சிக்குள் தனி அணியாக செயல்படும் நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம், ரூ.5,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள விஜய், அரசு கஜானா பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் மற்றும் சலுகைகளை வாரி வழங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கலந்துகொண்டார்.

சீனிவாசன் கூறியதாவது: சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதற்கு அப்போதைய அமைச்சர் பதிலளித்தார். அப்போது கே.என். நேரு மற்றும் எ.வ. வேலு குறுக்கிட்டனர். அவர்களுக்கு எதிராக கடந்தகால ஊழல்கள் குறித்த மூன்று தொகுதி ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டி, “புத்தகத்தை திறக்க வைத்துவிடாதீர்கள்” என எச்சரித்தார். ஆனால் அந்த மூவரும் மௌனம் காத்தனர். 

ஊரக வளர்ச்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள ஊழல்கள் வெளிவர வேண்டும்; தவறு செய்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. சவுதியில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை மீட்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றபோது, சபாநாயகர் ஐந்து நாட்கள் அனுமதி மறுத்தார். எடப்பாடியாரின் வெளிநடப்பு மற்றும் தொடர் அழுத்தத்திற்குப் பிறகே ஆறாவது நாளில் அனுமதி கிடைத்தது. மக்களின் உயிருடன் தொடர்புடைய அவசரப் பிரச்சினைகளுக்காக எடப்பாடியார் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: “உங்கள எடப்பாடியார் சும்மா விடமாட்டாரு...” - தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை...!

ராஜினாமா செய்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கொறடா உத்தரவை மீறியதற்காக அவர்களின் பதவியை ரத்து செய்ய எடப்பாடியார் உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதைத் தடுக்கவே மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், திருமண நிதியாக எட்டு கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000, ஐந்து ஏக்கருக்குட்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, மாதந்தோறும் மின் கட்டணக் கணக்கீடு (200 யூனிட் இலவசம்) ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. 

பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்துவதாகக் கூறிவிட்டு தற்போது ரூ.41 மட்டுமே அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோர் தங்களுக்குப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தனி அணியாகச் செயல்பட்டு கட்சிக்கு துரோகம் இழைக்கின்றனர். தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களே கட்சியில் நீடிக்க முடியும்; துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் கட்சியை வழிநடத்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் உள்மோதல்கள் பின்னணியில் இந்த விமர்சனம் வந்துள்ளது. கட்சி ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, ஆளும் தரப்பின் வாக்குறுதி மீறல்களையும் சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share