×
 

17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

பற்றாக்குறை காவிரி நீரைக் கணக்கிட்டு 17.604 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் உடனடியாகத் திறக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகம் முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியாக விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை தொடர்பான முக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழலில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு பெரும் சட்டப் போராட்டத்திற்கான களத்தை அமைத்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நீரைச் சரிகட்டும் வகையில் வினாடிக்கு 22,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஆணித்தரமாகக் கோரிக்கை வைத்தது. 

இதையும் படிங்க: இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

அவ்வாறு திறந்தால் மட்டுமே தமிழகத்திற்குரிய 28 டிஎம்சி நீர் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு வினாடிக்கு வெறும் 9,000 கன அடி மட்டுமே திறக்க ஆணையம் ஒருதலைப்பட்சமாக உத்தரவிட்டது. ஆனால், ஆணையம் பிறப்பித்த அந்தச் சொற்ப உத்தரவைக் கூட கர்நாடக அரசு சிறிதும் மதிக்காமல் செயல்படுத்தத் தவறிவிட்டதாகத் தமிழக அரசு தனது மனுவில் மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. 

குறிப்பாக, கடந்த 27-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையிலும் தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிடாமல், பாசனக் கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலமாக 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்திற்கு 80.451 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் கர்நாடகம் வெறும் 25.598 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. வறட்சிக் கால விகிதாச்சாரக் கணக்கீட்டின்படி பார்த்தாலும் கிடைக்க வேண்டிய 43.202 டிஎம்சி நீருக்குப் பதிலாகப் பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்காலும் சட்டவிரோத நடவடிக்கைகளாலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், குறுவை சாகுபடிக்கான நீரைக் கூடத் திறந்துவிட முடியாமல் தமிழகம் தவித்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தின் உரிமையான 17.604 டிஎம்சி பற்றாக்குறைத் தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகத்திற்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share