×
 

"நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

திருச்சி சமயபுரத்தில் திமுக எம்எல்ஏ கதிரவனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தேர்தல் சமயத்தில் கைகூப்பி ஓட்டுக்கேட்க வந்த மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அவரது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு என் குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்துப் புகார் தெரிவிக்கச் சென்றால், தனது குண்டர்களை வைத்து எங்களை மிரட்டுகிறார் என்று திருச்சியில் பாதிக்கப்பட்ட இளம் தாய் சினேகா கண்ணீர் மல்கப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி சினேகா (25). கர்ப்பிணியான இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரசவத்திற்காக, சமயபுரம் பகுதியில் திமுக எம்எல்ஏ கதிரவனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் ஏப்ரல் 29 அன்று சினேகாவுக்குப் பனிக்குடம் உடைந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் சினேகாவின் குடும்பத்தினர் தொடர்ந்து முறையிட்டும், அவர்கள் எந்தவொரு முறையான சிகிச்சையும் வழங்காமல் இரண்டு நாட்களாக அலட்சியமாக இருந்துள்ளனர்.

மே 1-ஆம் தேதி மாலை பிரசவ வலி ஏற்படுவதற்கான ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரவு முழுவதும் சினேகா கடுமையான வலியால் துடிதுடித்துள்ளார். அவரது உடல்நிலையைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுக்குமாறு மருத்துவரிடம் கெஞ்சியுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் மரணமடைந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு நேரில் சென்று நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கிய தவெக அரசு!

மே 2-ஆம் தேதி காலை, குழந்தை தானாக வெளியே வரும் சூழல் ஏற்பட்ட போது, பனிக்குடத்தில் தண்ணீர் இல்லை எனக் கூறி சினேகாவின் பிறப்புறுப்பு வழியாக மூன்று பாட்டில் தண்ணீரை மருத்துவர்கள் உள்ளே செலுத்தியுள்ளனர். பயந்துபோன சினேகா இதுகுறித்துத் தடுத்திக் கேட்டதற்குக் கூட அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து அன்றைய தினம் காலை 8.15 மணிக்குக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த குழந்தையிடம் எந்தவொரு அசைவும் இல்லை.

மேலும், பிறந்தது என்ன குழந்தை என்ற விபரத்தைக் கூடக் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையின் தந்தை விஜயிடம் அவசரமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கையெழுத்து வாங்கியுள்ளது. இதையடுத்து, மே 4-ஆம் தேதி மதியம் குழந்தையின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி, சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்குமாறு போராடியும், இறந்த குழந்தையைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அவர்கள் குழந்தையைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

குழந்தையை இழந்து வேதனையில் இருந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் 9-ஆம் தேதி தனலட்சுமி மருத்துவமனைக்குச் சென்று நிர்வாகத்திடமும், மருத்துவர் சூர்யாவிடமும் தங்களது குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்று நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பதில் அளிக்காத மருத்துவமனை நிர்வாகம், "நீங்கள் போய் காவல் நிலையத்திலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறி, அங்குப் பணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை வைத்து அவர்களை மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனை நேரில் சந்தித்துச் சினேகா புகார் தெரிவித்துள்ளார். அப்போது அவர், "நீ என்னை கேட்டுக்கொண்டா இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாய்?" என்று மிக இளக்காரமாகப் பேசியுள்ளார். மேலும், "நீ எங்கே சென்றாலும் செல், உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள், நான் எங்கே பார்க்க வேண்டுமோ அங்கே பார்த்துக் கொள்கிறேன்" என்று நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் நின்று கொண்டிருந்தபோது, தங்களைக் கேவலமாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் சினேகா குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே கிட்னி முறைகேடு புகாரில் சிக்கிய திமுக எம்எல்ஏ கதிரவனின் இந்த மருத்துவமனையில், மீண்டும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குழந்தை இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளித்துள்ளனர்.

 

 

இதையும் படிங்க: அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share