வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!
முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை தலைநகரில் தொடர்ந்து நிகழும் கொலைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரங்களிலும் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. இந்தப் பின்னணியில் திமுக எம்.பி. கனிமொழி காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தான் முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார்.
இந்தக் கருத்து எழுவதற்குக் காரணம், சென்னை திருவொற்றியூரில் நேற்று நடந்த படுகொலை. 28 வயதான பிரதீப் ராஜ், சென்னைத் துறைமுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர். திருவொற்றியூர் மேற்கு மாட வீதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத கும்பல் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டித் தாக்கியது.
இதையும் படிங்க: முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!
ரத்த வெள்ளத்தில் துடித்து விழுந்த பிரதீப் ராஜ், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருடன் கந்துவட்டி தொடர்பான பணத் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. இரு தரப்பினரும் சமீபத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிரதீப் ராஜ், திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் எதிர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன்னை மிரட்டுவதாகவும், பொய் வழக்குப் போட முயல்வதாகவும் புகார் அளித்து, வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
“எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று காவல்துறைக்கு எதிராகப் புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்தக் கொலை நடந்துள்ளது.இதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அடையார் வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் ஓடோடி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திலும் பழிவாங்கும் நோக்கம் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு கொலைகளும் பொது இடங்களில், பகல்-இரவு வேறுபாடின்றி நடந்திருப்பது, தலைநகரின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. காவல்துறை இரு வழக்குகளிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், தொடரும் இத்தகைய சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதையும் படிங்க: "இனி வரும் காலங்களில் ரொம்ப கவனமா இருங்க...” - சி.எம். விஜய் ‘சைகை’-யை எச்சரித்த திருமா...!