×
 

எழுதி கொடுத்ததை படிச்சா போதுமா?! மு.க.ஸ்டாலின் மீது நிர்வாகிகள் புகார்! கள ஆய்வு கூட்டத்தில் அப்செட்!

'கள ஆய்வு' என்ற பெயரில், எழுதி வைத்ததை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசி சென்றதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.

சென்னை: சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய ‘கள ஆய்வு’ குழுக்களை நியமித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியின் செய்தி தொடர்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 23 செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்றனர். கட்சி கொள்கைகளை பரப்பும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக அழைப்பு விடுக்கப்பட்டதால், பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், கூட்டம் நடைபெற்ற விதம் அவர்களை ஏமாற்றியுள்ளது.

செய்தி தொடர்பாளர்கள் சிலர் தெரிவித்ததாவது: “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில்கூட எங்களை அழைத்து பேசாத தலைமை, தோல்விக்குப் பிறகு அழைத்ததும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் ஸ்டாலின் தன் மனதில் இருந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உதவியாளர் தினேஷ் எழுதிக்கொடுத்த குறிப்பை அப்படியே வாசித்தார். இது வெறும் கண்துடைப்பு கூட்டம் என்பது உடனே தெரிந்தது” என்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி வியூக வகுப்பாளர் விலகல்! தவெக + காங்., கூட்டணிக்கு தாவல்! விஜய்க்கு ஆதரவாக பணியாற்ற முடிவு!

மேலும், “எங்களைப் பேச அனுமதித்தபோதும் ஸ்டாலினும் உதயநிதியும் கவனமாகக் கேட்கவில்லை. ஒரு செய்தி தொடர்பாளர் ‘தி.மு.க.வின் அடிநாதம் கள அரசியல்தான், அதை உதயநிதி செய்ய வேண்டும்’ என்றார். உடனே உதயநிதி, ‘விஜய் கள அரசியல் செய்துதான் முதல்வர் ஆனாரா? பிரச்னை சார்ந்த அரசியல் செய்தால் போதும்’ எனக் கூறினார்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செயல் திட்டங்கள் குறித்து பேச முயன்றபோதெல்லாம் தடை போடப்பட்டதாகவும், இறுதியில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை எப்படி கையாள்வது என்பதில் மட்டும் அதிக நேரம் செலவிடப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். “மக்களை கவர்வதை விட மீடியாவை கவர்வதில் தலைமைக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பரந்தாமன், அபிசுல்லா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாட்ஸாப் குழு கூட உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீடியா ஒருங்கிணைப்பாளராக மீண்டும் பலவேசத்தை நியமித்துள்ளதும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

தோல்விக்குப் பிறகும் கட்சித் தலைமை பாடம் கற்கவில்லை என செய்தி தொடர்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த உள்ளடி அதிருப்தி தி.மு.க.வுக்குள் புதிய விவாதங்களுக்கு வித்திடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share