நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!
வெற்றியோ தோல்வியோ திமுகவை ஆட்டிப்படைக்க முடியாது என்றும், நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள், திமுக என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் ராயபுரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.
வெற்றிகளாலோ, தோல்விகளாலோ திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றைக்கும் ஆட்டிப்படைக்க முடியாது; அரசியலில் நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள், ஆனால் திமுக என்றென்றும் நிலைத்திருக்கும் என்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதேபோல, திமுக தொண்டர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்க வந்தவர்கள்; அரசியலில் பிழைக்க வந்தவர்கள் அல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசமாகப் பேசினார்.
ராயபுரம் முன்னாள் பகுதிச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான 'கட்ஃபீஸ்' அ. பழனி அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இருவரும் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது 1949-ம் ஆண்டு இதே ராயபுரம் மண்ணில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில், கட்சியின் உழைப்பாளி 'கட்பீஸ்' பழனியை நினைவுகூருவது எங்களுக்குப் பெருமையளிக்கிறது.
இதையும் படிங்க: டெல்லி காட்சிகள் அதிர்ச்சியளிக்குது! நீட் போராட்ட தடியடிக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திமுகவை அசைத்துப் பார்ப்பேன், அழித்துப் பார்ப்பேன் என்று கூறிய பலர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வெற்றியோ அல்லது தோல்வியோ இந்த இயக்கத்தை என்றைக்கும் ஆட்டிப்படைத்தது கிடையாது. 'கட்பீஸ்' பழனி போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை, திமுக இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும் கம்பீரமாக இயங்கும். அரசியலில் நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள். ஆனால், திமுக என்றென்றும் நிலைத்திருக்கும்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது இன்றைய சூழலில் திமுக ஆட்சியில் இல்லை எனினும், கழகத் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எப்படிச் செயல்பட்டார்களோ, அதேபோல் இன்றும் மக்கள் பணியாற்றி வருகின்றனர். 76 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட இந்த இயக்கம், களத்தில் நின்று உழைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களை நம்பியே இயங்குகிறது.
வழக்குகளையும் சிறைவாசங்களையும் கண்டு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. சமீபத்தில் பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு வந்த சில மணி நேரங்களிலேயே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்த்து நாங்கள் பயப்படப் போவதில்லை. பதவியையும், சலுகைகளையும் எதிர்பார்த்துச் சென்ற ஒருசிலர் அரசியலில் பிழைக்க வந்தவர்கள்; ஆனால், நாங்களோ மக்களுக்காக 'உழைக்க' வந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!