தமிழ்நாட்டு மக்களை எளிதாக நினைக்க வேண்டாம்! காவிரி விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி!
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் கண்டித்து, தமிழ்நாட்டு மக்களை எளிதாக எண்ண வேண்டாம் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
காவிரி நதியின் குறுக்கே அணை மற்றும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதிலுக்கு 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனரும் தலைவருமான கே. அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, தமிழ்நாட்டு மக்களை எளிதாக இடைபோட வேண்டாம் எனக் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
கடந்த 16.02.2018 அன்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கக் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பானத் தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் ஏற்படுத்தத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம் மாநிலங்களவையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் பதில் அளித்திருந்தது. மத்திய அரசின் இந்த அப்பட்டமானத் தகவல் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே. அண்ணாமலை, கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கக் கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி எந்தக் கட்டுமானத்தையும் அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தார் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!
மேலும், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் திட்டமிட்டுப் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய உறுதியான நிலைப்பாட்டிலிருந்து திடீரெனப் பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு நேர்மையோடு செயல்படுமாறு மத்திய அரசைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் கர்நாடகா செல்கிறாரா?" - உறுதியான தகவல் இல்லை... பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டி!