தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!
விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் 3ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது மரபு மீறிய செயல் என ராமதாஸ் கண்டனம்.
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது தமிழக மரபை மீறிய செயல் என அவர் சாடியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விழாக்களில், நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதுதான் நீண்டகால மரபு மற்றும் விதிமுறை. ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலாவதாகவும், அதன் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதும் ஏற்கத்தக்கதல்ல. இந்த மரபு மீறல் மற்றும் தவறுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, புதிய அரசு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதமும் பாடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தைச் சிறுமைப்படுத்தும் விதமாக இத்தகைய நிகழ்வுகள் அமையக்கூடாது.
இதையும் படிங்க: புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!
மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டதாக ஒரு தரப்புக் கூறினாலும், ராமதாஸ் போன்ற மூத்த தலைவர்களின் இந்தக் கண்டனம் புதிய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மொழி மற்றும் கலாச்சார உணர்வுகள் மிகுந்த தமிழகத்தில், ஆட்சியின் முதல் நாளிலேயே இத்தகைய ஒரு விவாதம் எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற ராமதாஸின் கோரிக்கை, சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!