×
 

நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

இன்று அதிகாலை முதலே 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் (CRPF) பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஏழு வழக்குகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கௌதமி, தனது சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய சொத்துக்களை நிர்வகிப்பதற்காக அழகப்பன் என்பவருக்கு பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney) வழங்கியதாகவும், பின்னர் அதனை அவர் தவறாக பயன்படுத்தி சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 46 ஏக்கர் நிலம், சென்னை மற்றும் பிற பகுதிகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை அவர் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் ஏற்கனவே அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது பணமோசடி நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் மதுரையில் உள்ள மொத்தம் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியில் உள்ள அழகப்பனுக்கு தொடர்புடைய இடம், மதுரையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

இன்று அதிகாலை முதலே 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் (CRPF) பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்துள்ளனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த வழக்கில், சொத்து மோசடி குற்றச்சாட்டுகளுடன் பணமோசடி தொடர்பான அம்சங்களும் உள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: 100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share