முதல்வரின் பயணம் முதலீட்டை ஈர்க்கவா.? இன்ப சுற்றுலாவா.? விமர்சித்த EPS..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு மேற்கொண்ட பயணம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றிருந்தால் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இது இன்பச் சுற்றுலாவாகவே தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியிலும் இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.முதலமைச்சர் விஜய் தனது ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களுக்குள்ளேயே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக மாற்றும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்ததாக அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் பயணத்தின் தொடக்கத்தில் வெளியான புகைப்படங்கள் சர்ச்சையைத் தூண்டின. சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொண்ட காட்சிகள் பரவலாகப் பரவின.
நடிகர் அஜித் குமார் பங்கேற்ற அந்தப் பந்தயத்தைத் தொடங்கி வைத்த காட்சிகளும் வெளியாயின. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இது முதலீட்டுப் பயணமா அல்லது தனிப்பட்ட பயணமா என்று கேள்வி எழுப்பினர்.திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், வேறு ஒரு புகைப்படம் மட்டுமே வந்துள்ளது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். முதலீட்டை ஈர்ப்பதற்காகச் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான சந்திப்புகளின் படங்கள் இல்லாதது மக்களைக் கேள்வி கேட்க வைக்கிறது என்றார். ரீல்ஸ், ரீல் விடுவது தாஜ் தவெக ஆட்சி என விமர்சித்தார்.
இதையும் படிங்க: விஜய் காதுகளை எட்டிய எம்.ஜி.ஆரின் கனவு திட்டம்... உண்மையை போட்டுடைத்த துரை வைகோ...!
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அரசு பெருமளவு கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.பயணத்தின் போது முதலமைச்சருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சில அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் தொழில்துறை சார்ந்த முக்கிய அமைச்சர் உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்படவில்லை என்பது கூடுதல் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதையும் படிங்க: ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை " காட்பாதர்கள்"..! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!!