வெள்ளைக்கொடியா? காவிக்கொடியா? இபிஎஸ் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நச் பதில்..
திமுக ஆட்சியை பற்றி குறை கூற எதிர்கட்சித் தலைவருக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும், அதனால் அரைத்த மாவையே அரைத்தது போல் டெல்லி பயணத்தையே கூறிக் கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக ஆட்சி முடியும் வரை மக்களை தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் தி.மு.க அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான். பல தி.மு.க-வினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான். இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது.
தி.மு.க இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தி.மு.க நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது! போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது.
இதையும் படிங்க: மக்கள் உயிர் உங்களுக்கு அவ்ளோ அலட்சியமா? நீங்க பொறுப்பேத்துப்பீங்களா? முதலமைச்சரை லெஃப்ட் & ரைட் வாங்கும் நயினார்..
இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது? இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க பொதுக்கூட்டம் நடத்துகின்றது.
நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின்?. ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது தி.மு.க? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு, காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!
தி.மு.க கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை. நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தி.மு.கவினரிடம் இருந்து என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல அவருக்கு ஏதும் கிடைக்கவில்லை. அதனால், தான் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் குறைத்து கொள்ள விரும்பவில்லை, எனக் கூறினார். மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வெள்ளைக் கொடியுடன் டில்லி சென்று வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். நான் தான் ஏற்கனவே தெளிவா சொல்லிவிட்டேனே. வெள்ளைக் கொடியுடனும் போகவில்லை. காவி கொடியுடனும் போகவில்லை என்று கூறிவிட்டேன், என்றார். தி.மு.க., ஆட்சி முடியும் வரை மக்களை தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இ.பி.எஸ்., விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு.
அது எல்லாம் கொள்ளையடித்த ஆட்சி. ஏற்கனவே, சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் உள்ளன. அதை எல்லாம் சொல்லிட்டு இருந்தால், நேரம் பத்தாது. இது எல்லாம் வீம்புக்கு என்று பண்ணுவது. அதற்கு சில மீடியாக்கள் இரையாகி, அந்த செய்திகளை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. கொடநாடு வழக்கை சுட்டிக்காட்டி துரைமுருகன் கொடுத்த ட்விஸ்ட்..!