வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை! இனிக்க இனிக்க பேசி ஏமாற்றி விட்டார்கள்! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்தப் புதிய நம்பிக்கையையும் அளிக்கவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுமார் 129 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். முந்தைய திமுக அரசில் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒன்றிணைத்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதே முறையை தற்போதைய அரசும் தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளிக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் திட்டங்களே மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பழனிசாமி... கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும், கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4,500 நிர்ணயிக்கப்படும் என்றும், விதைப்பு காலத்தில் இரண்டு தவணைகளாக ரூ.15,000 வழங்கப்படும் என்றும், உழவர் உரிமை அட்டை மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார். ஆனால் அவற்றில் எந்த அறிவிப்பும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் கூறினார்.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் குறித்த முழுமையான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், காவிரி நீர் பிரச்சினை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்ட கருத்துக்கு தமிழக அரசு வலுவான பதில் அளிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
இறுதியாக, இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு "மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்" மட்டுமே வழங்க முடியும் என்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிய பட்ஜெட் இதுவெனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிலரை திருத்தவே முடியாது! சண்முகத்திற்கு எதிராக களமிறங்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் மறைமுக தாக்கு!