×
 

2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

2026-2027ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 2026-2027 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் திருப்பூர், கரூர் போன்ற ஜவுளி மையங்களும் கணிசமான பலன்களைப் பெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1, 2026 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 9-ஆவது முறையாக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு எடப்பாடி பழனிசாமி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்ட 2025-2026 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, உலக அளவில் போர் உள்ளிட்ட பதற்றங்கள் நிலவினாலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. 

2025-2026 நிதியாண்டில் வளர்ச்சி 6.5% முதல் 7% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026-2027-இல் 6.8% முதல் 7.2% வரை வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார உறுதியை வெளிப்படுத்துகிறது.நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இவை எதிர்கால வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.

இதையும் படிங்க: நாளை பட்ஜெட்: PF, EPFO கணக்கு வெச்சிருக்கீங்களா..?? வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்..!!

இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆராய்ச்சி, உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மின்னணு உற்பத்தி, மருந்துத் துறை, ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்காக்கள், உற்பத்தி மண்டலங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜவுளி மேம்பாடு திட்டங்கள் திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும் பயனளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்துறை தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார அடிப்படையாக இருப்பதால், இது உள்ளூர் தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும். மேலும், சரக்கு வேக வழித்தடங்கள், வேக ரயில் பாதைகள், நீர்வழிப் போக்குவரத்து மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் போக்குவரத்துத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

ஆயுர்வேதம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.2,000 கோடி நிதி ஆதார உத்தரவாதம் மற்றும் ரூ.10,000 கோடி சிறு-குறு தொழில் வளர்ச்சி நிதி ஒதுக்கீடு மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழ்நாட்டில் சிறு-குறு தொழில்கள் அதிகம் இருப்பதால், இதனால் மாநிலம் கணிசமாகப் பயனடையும்.

ஒட்டுமொத்தமாக, இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி நகர்த்துவதோடு, உலக அளவில் பொருளாதார ரீதியில் வலிமையான நாடாக உயர்த்தும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கை உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு, சிறு தொழில்கள் மற்றும் துறைசார் மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share