புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் நியமனம்! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு; டி.ஜி.பி. சந்திப் மிட்டல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிரடி மாற்றம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தமிழகத்தின் மிக உயரிய அதிகாரப் பதவிகளில் இன்று அதிரடி மாற்றங்களைச் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐஏஎஸ் (1990 பேட்ச்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்தியத் தேர்தல் ஆணையம், நிர்வாக நடுநிலையை உறுதிப்படுத்தும் வகையில் எம். சாய் குமார் அவர்களைத் தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு உடனடியாகச் நடைமுறைக்கு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரி இன்று மாலை 6:00 மணிக்குள் பொறுப்பேற்றுக்கொண்டதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழக டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு முக்கிய முடிவாக: டி.ஜி.பி. சந்திப் மிட்டல் (IPS 1995) அவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் ஆயுதப்படை டி.ஜி.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். தேர்தலுக்கும் முன் மாற்றப்படும் அதிகாரிகள் எவரும், தேர்தல் பணிகள் முடியும் வரை எவ்விதத் தேர்தல் தொடர்பான பதவிகளிலும் அமர்த்தப்படக் கூடாது என ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே தாம்பரம் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது தலைமைச் செயலாளரே மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றப்பட்ட அதிகாரிகளுக்குப் பதிலாகப் புதிய அதிகாரிகளை உடனடியாகப் பணியமர்த்தவும், தேர்தல் நடத்தை விதிகளைத் துல்லியமாகப் பின்பற்றவும் தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் வாரங்களில் மேலும் சில முக்கிய அதிகாரிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியான இந்த மாற்றங்கள் நேர்மையான தேர்தலை உறுதி செய்யும் எனத் தேர்தல் ஆணையம் நம்புகிறது.மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!