ஜெய்பீம் TO பைசன்..! படம் பார்க்க மட்டும் டைம் இருக்கா ஸ்டாலின்? விவசாயிகளுக்காக குரல் கொடுத்த EPS…!
படம் பார்க்க நேரம் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகளை கண்டுகொள்ள நேரமில்லையா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
பைசன் படத்த பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் பாராட்டினார். இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்ததாக கூறியுள்ளார். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை என்றும் ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்பதுதான் கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா என்றும் ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள் என்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள் என்றும் அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் எனவும் கூறினார்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு... ஃபெயிலியர் மாடல் DMK... இபிஎஸ் விமர்சனம்...!