7 ஏக்கர் தோட்டம்.. மாயமான மின் வயர்கள்! இபிஎஸ் விவகாரத்தில் ஆக்ஷனில் இறங்கிய தவெக அரசு!!
இந்தச் சம்பவத்தை நேற்று தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர் கோவிந்தராஜன் ஆகியோருக்குச் சொந்தமான சுமார் ஏழு ஏக்கர் தோட்டத்தில் நடந்த மின்வயர் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் விவசாயப் பணிகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்துக்குள் நுழைந்து, மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின்வயர்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் மோட்டார் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை நேற்று தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அவர், விவசாயிகளின் தோட்டங்களில் மின்வயர்கள், பம்புசெட்டுகள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!
“சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள எனது தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் போர்வெல் மின்மோட்டாரின் வயர்களை அறுத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதை நான் எங்கே போய் சொல்வது? எனக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இருக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், திருட்டுச் சம்பவத்திற்கான புகைப்பட ஆதாரங்களையும் பேரவையில் காட்டினார். விவசாயிகளின் உடைமைகளைப் பாதுகாக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பேரவையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் நகைச்சுவையாகப் பேசியதால் சிரிப்பலை எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, “அதை அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டாம். லைவ்லேயே போயிட்டு இருக்கிறது” என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, சகோதரர் கோவிந்தராஜன் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மர்ம நபர்களைக் கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதேபோன்ற திருட்டுகள் நடந்துள்ளதா, குற்றவாளிகள் ஏற்கனவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்களா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் விவகாரத்தால் அனல் பறந்த சட்டமன்றம்.. செங்கோட்டையன் vs இபிஎஸ்.. நடந்தது என்ன?