×
 

எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு?! 36 எம்.எல்.ஏ-க்கள் முரண்பாடு! அதிமுக சட்டசபை தலைவர் பதவிக்கு ஆப்பு?!

மொத்தமுள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசியலில் அதிமுகவுக்குள் புதிய அதிகாரப்போர் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய வெறும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுவது, அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் சி.வி.சண்முகத்தை தவிர மற்ற அனைவரும் காலை கூட்டத்திலேயே எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

இதற்கிடையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான ஆதரவு கடிதம் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவுக்கும் பேரவை செயலருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!

மாறாக, மொத்தம் உள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 பேர் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சி.வி.சண்முகத்தை துணைத் தலைவராக தேர்வு செய்யவும் பலர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், நெய்வேலி ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாலை நேரத்தில் தனியாக சட்டப்பேரவைக்கு வந்த சி.வி.சண்முகம் எம்எல்ஏவாக பதவியேற்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இன்னும் 2 அல்லது 3 மணி நேரம் பொறுத்திருங்கள்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் தற்போது இரு அணிகள் உருவாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் முக்கிய அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share