அதிமுக ஆட்சி அமையட்டும்..! மீனவர்களுக்கு மாஸ் அறிவிப்பு கொடுத்த இபிஎஸ்..!
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளின் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதனை அடுத்து, இபிஎஸ் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாய சங்கத்தினர் மற்றும் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.
பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு செய்து அதிமுக ஆட்சியில் மகசூல் குறைவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்ததாகவும், உழவன் செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தோஸ்த் முறையில சொன்னோம்! வேணாம்னா விடுங்க.. திருமாவளவன் ஓபன் டாக்..!
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, மீன்பிடி தடை கால நிவாரணமும் அதிமுக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும் என உறுதிப்பட தெரிவித்தார். தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும் என்று கூறிய அவர், கஜா புயலால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டபோது பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி பாதுகாத்ததாகவும், புயலின் போது சேதம் அடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும் கூறினார்.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, வீடு இல்லாத மீனவர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்த உடன் வீடுகள் கட்டித் தரப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: "சொன்னா கேட்க மாட்டீயா?" - ஆசையாய் காத்திருந்த அதிமுக நிர்வாகிக்கு ஆப்பு... எரிச்சலான எடப்பாடி...!